Wednesday, August 28

Sanctity of Rudraksha Mala - Telling Lies a Sin

பெரியவா சரணம்
மஹா பெரியவா பக்தர்  ஒருவர் ஒரு முறை  நேபாளம் சென்று, ஸ்ரீ பசுபதி நாதரை  தரிசனம் செய்து, அந்த உன்னதமான  க்ஷேத்திரத்தில், உயர்ந்த  ருத்ராக்ஷ மாலை  ஒன்றை வாங்கிக் கொண்டார்..
பிறகு, ஸ்ரீ மடம்  வந்து  பெரியவாளுக்கு  பசுபதி நாத்  ப்ரஸாதத்தையும், தான்  வாங்கிய ருத்ராக்ஷ மாலையையும்  ஸமர்ப்பித்தார்...
"பசுபதீஸ்வரரை  நன்னா தர்ஸனம் பண்ணினியா?"
"பெரியவா அநுக்கிரஹத்ல நன்னா தர்ஸனம்  பண்ணினேன்.."
பெரியவா  கையில்  அந்த  ருத்ராக்ஷ மாலையை  எடுத்துக் கொண்டார்.
"ஸெரி... இத.. என்ன  பண்ணப் போற?"
"பெரியவா  அநுக்கிரஹம் பண்ணிக் குடுத்தேள்.. ன்னா  கழுத்துல
  போட்டுக்கலான்னு... "இழுத்தார்..
மஹா பெரியவா  மௌனமாக  சில நிமிஷங்கள்  இருந்தார்..
" அப்போ... நீ.. இனிமே  பொய் சொல்லாம  இருப்பியா?"
ஒரே தடாலடியாக கேட்டார்... பக்தருக்குத்  தூக்கி வாரிப் போட்டது!
"ஆஹா! பெரியவா... இனிமே பொய்யே  சொல்ல மாட்டேன்! "
இப்படி ஒரு துணிச்சலான  பொய்யை,  ஸத்ய  ஸந்நிதியில் சொல்ல  நாக்கு  எழுமா?
"இல்ல... பெரியவா.. ஸத்யமா  என்னால  பொய் சொல்லாம இருக்க முடியாது...!"
"ஏனோ..?"
"ஏன்னா, நா.. ஒரு  வங்கி அதிகாரி.. அதனால, பொய்  சொல்லாம  சில ரெக்கார்டுகளை  தயாரிக்க முடியாது.. 'இப்படி எழுது' ன்னு  எனக்கு  மேல  இருக்கற  அதிகாரி உத்தரவு  போட்டா  என்னால மறுக்க முடியாது  பெரியவா... "
பரிதாபமாக  தன்  இயலாமையை ஒத்துக் கொண்டார்..
பெரியவா அந்த  ருத்ராக்ஷ மாலையை  கையில் வைத்து உருட்டிக்  கொண்டிருந்தார்..
" இந்தா பிடி!  பொய்  சொல்லாதவா யாருக்காவது... இந்த  மாலையைக் குடு! "
பக்தருக்கோ  பரம ஸந்தோஷம்! ஏனென்றால், இப்போது இதை யாருக்கு  போடுவது என்பது,  ஏற்கெனவே முடிவு செய்திருந்த ஒன்று தான்!
நமஸ்காரம்  பண்ணி விட்டு, பெரியவா விடமிருந்து அந்த ருத்ராக்ஷ  மாலையை  வாங்கிக் கொண்டார்..
" ஆஹா! என்  மனைவி சொன்னா மாதிரியே  ஆச்சு! இந்த  ருத்ராக்ஷ மாலையை  பேசாம  ஆத்துல  மஹா பெரியவாளுக்கு (படத்துக்கு) போட்டுடுங்கோ!... ன்னு  சொன்னா! அதுப்படியே தான்  இப்போ மஹா பெரியவாளும்  உத்தரவு  போட்டுட்டா!.."
ப்ரஸாதம்  வாங்கிக் கொண்டு வீடு திரும்பியதும், முதலில்  அந்த ருத்ராக்ஷ மாலையை, பூஜையிலிருந்த மஹா பெரியவா படத்திற்கு அணிவித்தார்..
" பொய்யே சொல்லாத ஒருத்தர், நம்மாத்து  பூஜை ரூம்லயே  இருக்கார்.... "என்று  மனைவியிடம் கூறி  ஸந்தோஷப்பட்டார்...
கணவனும், மனைவியும் ருத்ராக்ஷ மாலாதரனாக  காட்சியளித்த  தங்களுடைய  மஹா பெரியவாளை நமஸ்கரித்தனர்..
கொஞ்ச நான்  கழித்து,  அந்த  பக்தரின்  சொந்தக்காரர் ஒருவர், பெரியவாளை தர்ஸனம் பண்ண வந்தார்...
" ஒன்னோட ஸொந்தக்காரன், அதான்!  அந்த  வங்கியின் ஆஃபீஸரா  இருக்கானே!  அவன்ட்ட ஹரிச்சந்தரனோட  அம்ஸம் இருக்கு! தெரியுமோ?  ஏன்னா, தன்னால பொய் சொல்லாம  இருக்க முடியாதுன்னு  பொய்  சொல்லாம எங்கிட்டயே  ஒத்துண்டான்.."
ருத்ராக்ஷம்  என்பது, ஸ்படிகம், துளசி போல், மிகவும் பவித்ரமானது.. ருத்ராக்ஷத்தை  அணிபவர்களுக்கு முக்கியமாக  இருக்க வேண்டியது... ஸத்யம்!
ஸத்ய மூர்த்தி பெரியவா சரணம் சரணம்...

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...