Monday, February 7

darshan of bhothams

ஒரு அற்புத ஞானி!!!

ஒருமுறை  திருவண்ணாமலையில்  எங்கோ ஒரு மண்டபத்தில் சேஷாத்திரி ஸ்வாமிகள் அமர்ந்திருக்கிறார்.    
அவர் எப்போது எங்கே இருப்பார்  என்று ப்ரம்ம தேவனுக்குக்  கூட தெரியாது.
வயிறு பசித்தாலும் சொல்லத்  தெரியாது.  யாரோ  பக்தர் ஒருவர்  பார்த்து விட்டார்.  ஓடிப்போய்   உணவு பொட்டலம் ஒன்றைக்  கொண்டுவந்து  ஸ்வாமிகளிடம்  கொடுத்து, ''சுவாமி இதை சாப்பிடுங்கோ'' என்கிறார்.
ஸ்வாமிகள் அரைமனதாக கைகளில் அதை வாங்கிக்கொண்டு  ஒரு வாய்  போட்டுக் கொள்கிறார். என்ன தோன்றியதோ?  அப்படியே  பொட்டலத்தில் இருந்த உணவை கைகளால்  அள்ளி  மேலும் கீழும்  பக்கத்திலும் வீசினார். பக்தருக்கு  ஒன்றும்  புரியவில்லை.  ஏன் இப்படி செய்தீர்கள்  என்று  எப்படிக் கேட்பது?  


தைரியத்தை  வரவழைத்துக் கொண்டு  ''சாப்பிடாமல்   இப்படி கீழே இறைக்கிறீர்களே,  சுவாமி"  என முனகினார்.

''நீ எனக்கு தந்தை  நான் மட்டும் எப்படிடா சாப்பிடுவேன்.?  எல்லா தேவதைகளும்  ''எனக்கு எங்கே?'என்று கேட்கிறார்களே. அது தான் அவர்களுக்கும் கொடுத்துட்டேன்''  என்று சொல்லிக்கொண்டே  மீதி  பொட்டலத்தில் இருந்ததையும் வீசி எறிந்தார். 

பக்தருக்கு  இது  பைத்தியம் என்று தானே  தோன்றும்?

''நீங்க  சொல்ற   'பூதம் தேவதைகள்" என் கண்ண்ணுக்கு தெரியலையே''   

"ஓஹோ  நீ  அவ்வளவு பெரிய ஆளா? 
பூதம் தேவதைகளை எல்லாம்  கண்ணால் பார்த்தால் தான் நான் சொல்றதை நம்புவியா?"

தன்னையறியாமல் பக்தர்  "ஆமாம்" என தலையாட்டி விட்டார் .

''என்கிட்டே வா ''.    


அருகில் வந்த பக்தரின்   ரெண்டு  புருவங்களுக்கு மத்தியில்  தனது வலது கட்டை விரலை வைத்து  கொஞ்சம்  அழுத்தி விட்டு  ''கண்ணை மூடிட்டு  திறந்து பார்''
பக்தர் கண்களைத் திறந்து பார்த்தார்.
அவர்  அருகே  எதிரே, பக்கத்தில்  எங்கெல்லாம்  சேஷாத்திரி ஸ்வாமிகள்  உணவை வீசி  எறிந்தாரோ அங்கெல்லாம்  கோரைப்பற்களும் நீளமான நாக்கும் கொண்ட பெரிய  பூதங்கள் வேகமாக எடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தன.   

''ஐயோ''  என்று பெரிதாக அலறிய பக்தர்  அப்படியே  சேஷாத்திரி ஸ்வாமிகள் திருவடிகளில் விழுந்தார்...

ஓம் சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் திருவடிக்கே!!!!

J K SIVAN....
Related Posts Plugin for WordPress, Blogger...